Monday, June 28, 2021

வில்லு - விமர்சனம் அல்ல.

பொதுவாக திரைப்படங்களுக்கு என்னுடைய வலைப்பதிவில் விமர்சங்கள் எழுதியது கிடையாது. ஏனென்றால் எனக்கு ஒரு குறிப்பிட்ட நடிகரை பிடிக்கும் அதனால் என்னையும் அறியாமல் சில விஷயங்கள் ஒரு"தலை" பட்சமாக அமைந்து விட வாய்ப்புகள் உண்டு. மேலும் நான் உண்மையை கூறினாலும் அது ஒரு"தலை" பட்சமாகத்தான் கருத்தில் கொள்ளப்படும். மக்களை சென்றடையவும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவும் திரைப்படம் ஒரு மிகசிறந்த ஊடகம். குத்துப்பாட்டும் கவர்ச்சியும் இருந்தால்தான் படம் வெற்றியடையும் என்பது மிகவும் தவறான ஒரு கருத்து. நமது இளைய தளபதியிடம் நீண்ட நாட்களாக ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அதாவது வணிக திரைப்படங்கள்தான் வெற்றி பெரும் மேலும் அதுதான் நமக்கு சரிவரும் என. ஆனால் அதுவல்ல உண்மை........ வணிக திரைப்படம் கலைப்படம் என்று பாகுபாடெல்லாம் கிடையாது..... இரண்டே சினிமாதான் உண்டு ஒன்று மக்களுக்கு பிடித்து இன்னொன்று மக்களுக்கு பிடிக்காதது. அதற்காக விஜயை "ஹேராம், அன்பே சிவம், சொல்ல மறந்த கதை, குசேலன், பச்சைக்கிளி முத்துசரம்" போன்ற படங்களில் நடிக்க சொல்லவில்லை. நல்ல கதையுடன் வணிக விசயங்களும் அடங்கிய சேது, முகவரி, காதல் கோட்டை, சந்தோஷ் சுப்பிரமணியம், சுப்ரமணியபுரம், சித்திரம் பேசுதடி, காக்க காக்க போன்ற படங்களில் நடிக்கலாமே!!!!! தொடர்ச்சியாக இல்லையென்றாலும் அவ்வப்பொழுது....... ஏன் அவர் நடித்த காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரெண்ட்ஸ், பிரியமானவளே, பத்ரி படங்களை விடவா மதுர, திருப்பாச்சி, சிவகாசி, ஆதி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு படங்கள் மக்களுக்கு பிடித்து விட்டது????? நிச்சயமாக இல்லை..... மகேஷ் பாபுவின் தயவால் வந்த கில்லி, போக்கிரி இரண்டு படங்களும் வராமல் இருந்திருந்தால் ஒரு வேலை உணர்ந்திருப்பரோ என்ன என்னவோ? வில்லு படம் வெளியான பின்பு வழக்கம்போல் எங்கள் நண்பர்களுக்குள் காரசாரமான விவாதம் தொடங்கியது. வேற்றுமொழி படங்களை பார்க்காமல் வில்லு முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு படத்தின் முதல் பாதி (மட்டும்) பிடித்திருக்கலாம். ஏனென்றால் இந்த படம் ஆரம்பித்து சரியாக ஒரு மணி நேரத்திற்கு பின்புதான் படத்தின் கதை என்ன என்பதை பற்றி பேச துவங்குவார்கள். ஆனால் இந்த ஒரு மணி நேரத்தில் வரும் காட்சிகளில் "அத்தடு" என்ற தெலுங்கு படத்தில் இருந்து ஒரு சண்டை காட்சி, "ஸ்டாலின்" படத்தில் இருந்து ஒரு காட்சி மற்றும் டயலாக்குகள், "சங்கர் தாதா" படத்தில் இருந்து இரண்டு பாடகள், பின் பாதியில் "ஜல்சா" படத்திலிருந்து இரண்டு பாடல்கள், "சோல்ஜர்" படத்தின் கதை இவற்றின் ஒட்டு மொத்த கலவைதான் "வில்லு". இவை அனைத்தும் தெரிந்து இந்த படத்தை பார்த்து பின் வில்லு பார்க்கும் ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும் என யோசித்தால் எனது ஆதங்கம் உங்களுக்கு தெரியும். ஒரு வேளை "அறியாமைதான் இன்பம்......... அறிவது தவறு" என்னும் பழந்தமிழ் கூற்று சரிதானோ????? விஜய் போன்ற நடிகர்கள் இன்னும் எவ்வளவோ நல்ல படங்களில் நடிக்கலாம் என்பதுதான் கருத்தே தவிர அவர் மோசமான நடிகர் என்பதல்ல. எனக்கு இதுதான் சரி வரும் என்று அவர் முடிவு செய்து கொண்டு அவரை அவரே ஒரு வட்டதிருக்கு சுருக்கி கொண்டு இருக்கிறார். ஆனால் அவரால் இன்னும் நல்ல படங்களில் நடிக்க முடியும் என்பதே உண்மை. ஓடாத படங்களை வெற்றி படங்களாக கட்டிக்கொள்வதில் அவருக்கு இருக்கும் முனைப்பு நல்ல படங்களின் மீது திரும்பினால் அந்த அவலங்கள் தேவையிருக்காது. சமீபத்தில் நண்பர்களுக்குள் அனுப்பிய மின்னஞ்சல் தொகுப்பில் நண்பர் ஒருவர் சொன்னார் "படம் இருநூறு நாள் ஓடும் ஆனால் மதுரையில் பத்து நாள்தான் ஓடியது சேலத்தில் பதினாறு நாள்தான் ஓடியது என்று நான் கணக்கு சொல்வேன் என்று". அவரை பொறுத்த வரையில் அவருக்கு விஜய் படம் பிடிக்கிறது அவர் கண்களில் நூறாவது நாள் போஸ்டர் தெரிகிறது. அவர்கள் அதற்குமேல் எதையும் தெரிந்து கொள்வதில்லை. உதாரணதிருக்கு "அழகிய தமிழ் மகன்" படம் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. சென்னை ரிலீஸ் உரிமம் பொதுவாக விஜய் கைகளில்தான் இருக்கும் [நூறு நாள் ஓட்ட எளிதாக]. ஆனால் இந்தமுறை பிரமிட் சாய்மீரா அவர்களே ரிலீஸ் செய்தனர். விளைவு படம் ஐந்து வாரங்களுக்கு மேல் ஓடவில்லை. விடுவாரா நம் விஜய் படத்தை எ.ஜி.எஸ் என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கி மீண்டும் சாய் சாந்தி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் போஸ்டர் அடித்து பட்டையை கிளப்பினார்கள். அந்த நபருக்காக அவர் ஆசைப்படியே இதோ ஆதாரம்: இதே போல் ஒவ்வொன்றிற்கும் ஆதாரத்துடன் பேச முடியும். ஆனால் இதுவல்ல நமது வேலை. இப்பொழுது மக்கள் முன்பு போல் இல்லை எல்லாவற்றையும் உற்று நோக்க துவங்கிவிட்டார்கள் என்பதையும் விஜய் புரிந்து கொள்ள வேண்டும். ஐந்தாவது வாரமே அனைத்து அரங்குகளிலும் ஒரு காட்சிக்கு வந்த திரைப்படம் நூறு நாள் ஓடி வெற்றிகண்ட பெருமை விஜய் அவர்களை மட்டுமே சாரும். சக போட்டியாளர் அஜித் படங்கள் எத்தனையோ ஓடாமல் போயிருக்கின்றன எத்தனையோ ஐம்பது நாட்கள் கடந்து சராசரி வெற்றி பெற்றிருக்கின்றன ஆனா ஒரு போதும் அவர் இது போன்ற செயலை செய்ததில்லை. இது பற்றி அபிராமி தியேட்டர் உரிமையாளர் "அபிராமி ராமநாதன்" அவர்களே கூறியிருக்கிறார். அவர்களது திரையரங்கில் பரமசிவன் திரைப்படம் அறுபது நாட்கள் நன்றாக ஓடி பின்பு கூட்டம் குறைந்தவுடன் அவரே ஒரு காட்சிக்கு மாற்றி நூறு நாள் [லாபம் தந்த படமாதலால்] ஓட்ட முடிவு செய்தபோது அஜித் போன் செய்து ஏன் இப்படி ஒரு காட்சி ஒட்டுகிறீர்கள் ஓடவில்லை என்றால் பரவாயில்லை உங்களுக்கு லாபம் தந்தால் அது போதும் என்று கூறியதாக கூறினார். இப்பொழுது ஏகன் படம் கூட எழுப்பதைந்து நாட்களுக்கு பிறகு விளம்பரம் வரவில்லை. எழுப்பதைந்து நாட்கள் ஓடிய படத்தை நூறு நாள் படமாக மாற்றுவது ஒரு எளிதான வேளை ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. அப்படத்தின் தகுதி அவ்வளவுதான் என்பதுதான் உண்மை. இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை. வில்லு பார்க்கும் பொழுது ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. விஜய் ஆட சொன்னால் வரிந்து கட்டி கொண்டு நிற்கிறார், காமெடி பண்ண மிகவும் ஆசைப்படுகிறார். ஆனால் கதை என்றால் கௌண்டமணி ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் "டென் ஸ்டெப்ஸ் பேக்". வருத்தப்பட வேண்டிய இன்னொரு விஷயம் [அவரும், மக்களும்] வில்லு என்னுடைய ஐம்பதாவது படமாக இருந்திருக்கலாம் என ஆதங்க படுகிறார். இதையெல்லாம் விட இன்னொரு விஷயம் சமீபத்தில் சிஃபி.காம் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அடுத்த படத்தின் கதை என்ன என்று ஒரு ரசிகர் கேட்டதிற்கு கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் "ஏறத்தாழ திருப்பாச்சி போன்ற கதைதான்" என்று சொல்லியிருக்கிறார்.

3 comments:

Unknown said...

நல்லா இருக்குடா உன்னோட அலசல்....

Karthikeyan Tamilmani said...

idhu alasal alla.... vilaasal.....

TAMILVENDHANIROSHA said...
This comment has been removed by the author.