Monday, June 28, 2021

டீ கடை

ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத எத்தனையோ விஷயங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த டீ கடையும் அதன் பெஞ்சுகளும்.......... மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு டீ கடைகளில் மேல் அழியாததொரு பாசம் உண்டு..... கல்லூரிக்கு போக ஆரம்பித்த நாள் முதல் டீ கடைகள் தான் சொர்க்கம்....... ஒவ்வுறு ஊரிலும், ஏரியாவிலும் ஒரு குறிப்பிட்ட டீ கடைகள்...... அந்த கடைகளில் வளர்ந்தது கற்றது நிறைய உண்டு..... மணப்பாறை வெண்ணிலா டீ ஸ்டால், விநாயகா டீ ஸ்டால், திருச்சி காஜாமலை நாகநாதர் டீ ஸ்டால், தில்லை நகர் விநாயகா டீ ஸ்டால், உறையூர் விநாயகா டீ ஸ்டால், சத்திரம் பேருந்து நிலையம் காயத்ரி டீ ஸ்டால், ஆதம்பாக்கம் பேருந்து நிலையதிருக்கு எதிரே உள்ள டீ ஸ்டால், ஸ்பென்செர் ப்ளாசாவிலுள்ள குட்டி டீ ஸ்டால் என என் வாழ்க்கையோடு எப்பொழுதும் தொடர்புடைய எத்தனையோ டீ கடைகள்...... இந்த கடைகளில் நான் செலவழித்த நேரங்கள் என் வாழ்வின் இனிமையான தருணங்கள்...... நினைத்தாலே இனிக்கும் இனிய நினைவுகள்........ மணப்பாறையில் நண்பர்களுடன் தங்கியிருந்த போது பெரும்பாலான நாட்கள் செகண்ட் ஷோ சினிமா பார்ப்பது வழக்கம். ஆனால் படம் முடிந்தவுடன் நான் நேரே போகும் இடம் வெண்ணிலா டீ கடைதான்...... நானும் என் நண்பன் ஜானகிராமனும் கொட்ட கொட்ட பனியில் விழித்து நேரம் போவது தெரியாமல் அந்த சினிமாவை எங்களுக்கு தெரிந்தவரையில் அக்கு வேறு ஆணி வேறாக அலசி எடுப்போம். அந்த டீ கடைகாரரும் எங்களை கேட்காமலே ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒரு டீ கொண்டுவந்து கொடுத்து விடுவார்...... சில நாட்கள் எங்களிடம் பணமே இருந்ததில்லை ஆனால் அப்பொழுதும் அவர் டீ கொடுப்பதை நிறுத்தியதில்லை..... அவர் முதல் வாங்கிய பால் அடுத்த நாள் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிவரை தாங்கும. இதில் விசேஷம் என்னவென்றால் முதல் நாள் மாலையில் இருந்து சுண்டிப் போய் அந்தப் பாலின் சுவை கிட்டத்தட்ட பால்கோவா போலிருக்கும். யாரேனும் அந்த நேரத்தில் டீ குடித்திருந்தால் கண்டிப்பாக உணர்திருப்பீர்கள்...... அந்த டீ கடையின் நைட் மாஸ்டர் ஒரு அரை மணி நேரம்தான் தூங்குவார்...... நான்கு மணிக்கும் படுத்தால் நாலரை மணிக்கு எழுந்து விடுவார்.... மீண்டும் அவரது முதல் போனி நாங்கள்தான்...... என்னுடைய முதல் காதலை பற்றி பேசிப் பேசியே பல இரவுகள் உறக்கமின்றி போயிருக்கிறது..... காலை ஐந்து மணிக்கு படுத்து காலை எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எழுந்து தாமதமாக மட்டுமே கல்லூரி சென்று வந்ததுண்டு.......

No comments: